27 பிப்., 2011


பரபரப்பான பெங்களூரு போட்டி! இந்தியா(எ)இங்கிலாந்து ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது!

First Published : 27 Feb 2011 07:21:57 PM IST

Last Updated : 27 Feb 2011 10:48:27 PM IST
பெங்களூரு, பிப்.27: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்  தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ரன்கள் சேர்த்தது.

டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய சேவாக், சச்சின் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால் சேவாக் முதல் இரண்டு ஓவர்களில் சிறிது தடுமாறினார். அவர் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டிய சேவாக் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் பிரஸ்னன் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த காம்பிரும் சச்சினும் நன்கு ஆடி ரன்கள் சேர்த்தனர். காம்பிர் 51 ரன்கள் எடுத்தார். சச்சின் 120 ரன்கள் எடுத்தார். இவர் உலகக் கோப்பையில் அடிக்கும் 4வது சதம். அவருடைய தனிப்பட்ட சாதனையில் ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 47வது சதம் இது.

பின்னர் யுவராஜ் சிங், தோனி இருவரும் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். தோனி 31 ரன்களும் யுவராஜ் 58 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய பின்வரிசை ஆட்டக்காரர்கள் சுமாராக ஆட இந்திய அணி மட மடவென்று விக்கெட்களை இழந்தது. கடைசி ஓவரில் அடுத்தடுத்து கடைசி இரு விக்கெட்கள் விழ இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது.

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய ஸ்ட்ராஸ் பீட்டர்சன் இருவரும் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அந்த அணியின் துவக்க வீரர் ஸ்ட்ராஸ் 158 ரன்கள் குவித்து வெற்றி நாயகனாக ஜொலித்தார். பீட்டர்சன் 31 ரன்கள் எடுத்தார். ட்ராட் 16 ரன்களும் பெல் 69 ரன்களும் குவித்தனர்.

போட்டி முழுவதும் இங்கிலாந்து பக்கமே சென்றுவிட்டது. 43வது ஓவரின் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தபோது அப்படித்தான் ரசிகர்கள் எண்ணினர். ஆனால் ஜாகீர் கான் வீசிய பந்தை அடித்தார் பெல். அதை அழகாகப் பிடித்து அவுட் ஆக்கினார் விராட் கோலி. அதன் பின் வந்தவர்கள் தங்கள் பங்குக்கு ரன் விகிதத்தை ஏற்றி ஆட்டமிழந்தனர்.

8 விக்கெட் இழந்த நிலையிலும் அந்த அணி வீரர்கள் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசித் தள்ளினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு சரியாக 338 ரன்களை எடுத்தது. இதன்மூலம் போட்டி டை ஆனது. யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்த போட்டியால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இறுதி ஓவர் வரை ரசிகர்களை சீட் நுனி வரை வரவைத்த மேட்ச் ஆக இருந்தது இந்தப் போட்டி.

கருத்துகள் இல்லை: