2 ஜூலை, 2011

போர்முலா 1 போட்டிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.
வாகன ஓட்டப் போட்டிகளில் மிகவும் உயர்வானதாகக் கணிக்கப்படும் போர்முலா 1 போட்டிகள் இவ் வருடம் 19 நாடுகளில் நடக்கவுள்ளன (முதலாவது போட்டி Bahrain இல் நடைபெறுவதாக இருந்தது. கலவரங்களினால் அது நடைபெறவில்லை.). 12 கார் நிறுவனங்கள் பங்குகொள்ளும் இப் போட்டிகளில் தலா 2 கார் வீதம் 24 கார்கள் போட்டியிடவுள்ளன. இவ்வருடம் போட்டியிடும் 24 ஓட்டுனர்களில் 5 பேர் வெற்றிவீரர்கள் (World champion) ஆவர்.
புதிய விதிகளுக்கமைய ஒவ்வொரு நிறுவனமும் தமது கார்களைப் புதிதாக வடிவமைத்துள்ளன. முன்பில்லாதவாறு இப்போதெல்லாம் கார் ஓட்டுனர்களைவிட தொழில்நுட்பத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தெரிவுப் போட்டிகளின்போது சுமார் 5 km நீளமுள்ள ஓடுபாதையைச் சுற்றி வர எடுக்கும் நேரம் முதல் தர ஓட்டுனர்களுக்கிடையே சில நூறில் ஒரு வினாடி மட்டுமே வித்தியாசப்படும். ஆகவே இந்தக் குறுகிய நேரத்தை எப்படிக் குறைப்பது என்பதும் காரின் வேகம் இன்னொரு காரின் வேகத்தைவிட எங்கு வித்தியாசப் படுகின்றது என்பதைத் தேடி அறிந்து அதற்கேற்றவாறு காரில் மாற்றங்களைக் கொண்டு வருவதிலுமே வெற்றி தோல்வி தங்கியுள்ளது.

அநேகமாக போட்டிகளின் பரீட்சார்த்த ஓட்டம் வெள்ளிக் கிழமைகளில் ஆரம்பமாகும். வெள்ளியன்று இரண்டு மணி நேரத்திற்கு போட்டி நடைபெறும் ஓடுபாதையில் விரும்பியவாறு ஓடலாம். இந்த நாளில் பொறியியலாளர்கள் தாம் வடிவமைத்தை கார் குறிப்பிட்ட மைதானத்தில் எப்படி ஓடுகின்றது என்பதைப் பரிசோதிப்பார்கள். அதற்கேற்றவாறு காரில் சில மாற்றங்களைக் கொண்டு வருவார்கள். வெற்றி தோல்வி யாருக்கென்று பார்க்கப்படுவதில்லை. ஓட்டுனர்கள் எதிர் அணிகளுடன் தம்மை பரீட்சித்துப் பார்க்க இந்நாளைப் பயன்படுத்துவார்கள்.

சனிக்கிழமை காலையும் விரும்பியவாறு ஓடலாம். சனி பின்னேரம் ஒவ்வொரு காரின் வேகமும் கணிக்கப்படும். ஒவ்வொரு காரும் தனித் தனியாக பல தடவை ஓடுபாதையை அதி வேகமாகச் சுற்றி வர வேண்டும். ஒரு ஓட்டுனர் பல தடவை சுற்றி வந்தாலும் அவர் மிகக் குறைந்த நேரத்தில் சுற்றிவந்தது மட்டுமே குறித்துக் கொள்ளப்படும். பின்னர் அவர்களுக்குள் அதிவேகமாக ஓடியவர்களைத் தெரிவு செய்து மீண்டும் ஓடுபாதையைத் தனித் தனியாகச் சுற்றி வர வேண்டும். இவர்களில் மிகக் குறுகிய நேரத்தில் ஓடி வந்தவர் போட்டி தொடங்கும்போது முதல் வரிசையில் இடம்பெறும் தகுதியைப் பெறுகிறார். அடுத்த குறைந்த நேரத்தில் ஓடியவர்கள் இவரின் பின் வரிசைகளில் இடம்பெறுவார்கள்.

ஞாயிற்றுக் கிழமை போட்டி ஆரம்பமாகும். இரண்டு நிரைகளில் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தைப்பட்டு, ஒரே நேரத்தில் எல்லாக் கார்களும் ஓடத் தொடங்கும். கார்கள் சுமார் 50 தரம் ஓடுபாதையைச் சுற்றி ஓடும். காரின் டயர்களை மாற்ற வேண்டுமானால் அக் கார் நிறுவனத்தின் தரிப்பிடத்திற்குச் சென்று மாற்றிவிட்டுத் தொடர்ந்து ஓடலாம். டயர் மாற்றும் நேரம் 10 வினாடிகளுக்குக் குறைவானதாகவே இருக்கும். இந்த நேரமும் வெற்றியைத் தீர்மானிப்பதாகவே இருக்கும். முன்னர் ஒரே நேரத்தில் எரிபொருளையும் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால் புதிய விதிகளின்படி போட்டி ஆரம்பித்ததும் எரிபொருள் நிரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு போட்டி முடிவடைந்ததும் ஒவ்வொருவருக்கும் புள்ளிகள் வழங்கப்படும். ஏனைய 19 போட்டிகளிலும் இவாறே புள்ளிகள் வழங்கப்படும். இறுதியில் மொத்தமாக அதிக புள்ளிகளைப் பெற்றவர் உலக வெற்றியாளராகக் கொள்ளப்படுவார். அதிக புள்ளிகளைப் பெற்ற கார் நிறுவனமும் அவ்வாண்டின் சிறந்த நிறுவனமாக அறிவிக்கபப்டும்.

இவ் வருடம் யார் வெற்றிபெறுவார்கள் என்று எதிர்வுகூற முடியாத அளவிற்று கார்களில் ஒவ்வொரு நிறுவனமும் தமது கைவரிசையைக் காட்டியுள்ளன. போட்டிகள் தொடங்கினால்தான் தெரியும்.

கருத்துகள் இல்லை: