22 ஜன., 2013

சிட்னி ஒருநாள் போட்டிக்கு ஜெயவர்த்தன கடும் எதிர்ப்பு
சிட்னி ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இதற்கு இலங்கை அணித்தலைவர் ஜெயவர்த்தன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில், இலங்கை 2-1 என்று முன்னிலை வகித்தது.
நான்காவது போட்டி சிட்னியில் நேற்று நடந்தது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இலங்கை வேகத்தில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் ஆட்டம் கண்டது. அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 222 ஓட்டங்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இலங்கை அணியின் அணித்தலைவர் ஜெயவர்த்தன 4 ஓட்டங்களும், டில்ஷன் 9 ஓட்டங்களும் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தது.
இலங்கை அணி 3.2 ஓவரில் 14 ஓட்டங்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இலங்கையின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
ஐ.சி.சி., விளக்கம் தருமா:
இதனால் ஆத்திரம் அடைந்த அணித்தலைவர் ஜெயவர்த்தன கூறுகையில், கடந்த நவம்பரில் பல்லேகலேவில் நடந்த நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் போட்டியின் போதும் மழை குறுக்கிட்டது.
மிக மோசமான நிலையில் தொடர்ந்து விளையாடினோம். அப்போது களநடுவர் இருந்த ஆன்டி பைகிராப்ட், விளையாடுவதற்கு ஆபத்தான சூழ்நிலை இருந்தால் மட்டுமே போட்டி நிறுத்தப்படும் என்றார்.
ஆனால், சிட்னி போட்டிக்கு களநடுவர் இருந்த ஸ்ரீநாத், விளையாடுவதற்கு உகந்த சூழ்நிலை இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்படுகிறது என்றார்.
இரு இடங்களிலும் வெவ்வேறான விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தொடருக்கும் ஒரே மாதிரியான நிலையை கையாள வேண்டும் என்றும் இது குறித்து ஐ.சி.சி. களநடுவர் ஸ்ரீநாத்திடம் விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் அனுப்பப்படும் எனவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: