26 மார்., 2013

2 இலங்கை வீரர்களை நீக்க சூப்பர்கிங்ஸ் முடிவு
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது சீசன் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ம் திகதி தொடங்கி மே 26ந் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்தப்போட்டி சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், மொகாலி, ஜெய்ப்பூர், புனே, தர்மசாலா, ராய்ப்பூர், ராஞ்சி ஆகிய 12 நகரங்களில் நடக்கிறது.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் மாணவர் கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டம் ஐ.பி.எல். போட்டிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எச்சரித்து இருந்தது.
இதனால் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று ஐ.பி.எல். அமைப்பை மற்ற அணிகளின் உரிமையாளர்கள் வற்புறுத்தினார்கள்.
ஆனால் போட்டிகளை சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற இயலாது என்று ஐ.பி.எல். அமைப்பை சேர்ந்த நிர்வாகியும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக செயலாளரும் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நேற்று மாலை சென்னை பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ்ஜை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது குறித்தும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் சென்னையில் இலங்கை வீரர்களை கொண்டு போட்டி நடத்துவது குறித்து பொலிசாருடன் என்.சீனிவாசன் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் போட்டிகளை நடத்த காவல் துறையினர் சில ஆலோசனைகளை வழங்கியதாகவும், அவற்றை ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவில் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக அவர் கூறியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படும் வகையில் தங்கள் அணியில் உள்ள நுவான் குலசேகரா, அகில தனஞ்ஜெயா என்ற 2 இலங்கை வீரர்களை நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடாமல் இருக்கும் வகையில் இந்த 2 பேரையும் அணியில் இருந்து இந்த சீசனுக்கு நீக்குவது என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 13 இலங்கை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பஞ்சாப் அணியை தவிர மற்ற 8 அணிகளில் இலங்கை வீரர்கள் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 இலங்கை வீரர்களை நீக்குவதுபோல மற்ற அணிகளும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமாவது இலங்கை வீரர்களை நீக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் மற்ற அணிகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து என்ன முடிவு செய்து இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
மற்ற அணிகளில் இடம் பெற்றுள்ள இலங்கை வீரர்கள் விபரம்:
மும்பை இண்டியன்ஸ்: மலிங்கா
டெல்லி டேர்டெவில்ஸ்: ஜெயவர்த்தன, மெண்டீஸ்
றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: டில்சன், முரளீதரன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: செனனாகயே
புனே வாரியர்ஸ்: மேத்யூஸ், அஜந்தா மெண்டீஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்: குஷால் பெரைரா
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: சங்கக்காரா, திசாரா பெரைரா

கருத்துகள் இல்லை: